தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வழங்கப்பட வேண்டிய எந்தவித நிலுவை நிதியும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும், அந்த வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்கள் வளர்ச்சி பணிகளுக்காக கடன் பெறுவது வழக்கமான ஒன்று என்றும், அந்த நிதி கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற துறைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்காக கடன் நிதியை உற்பத்தி சார்ந்த முதலீடுகளுக்கு பயன்படுத்துவது முக்கியம் என்றும், நீண்டகால வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.